மும்பை: எஸ் வங்கி மோசடி வழக்கில் வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கபில் வாத்வான், தீரஜ் வாத்வான் இருவர் மீதும் அமலாக்கத்துறை 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தினால் நீதிபதி பாரதி தாங்க்ரே ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

இருவரும் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கவும், ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் அவர் உத்தரவிட்டு உள்ளார். இதே வழக்கில் சிபிஐயும் இருவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதால்  ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாது. இருவரும் சிறையில் தான் இருக்க வேண்டும்.

வங்கி மோசடி வழக்கில் வாத்வான் சகோதரர்களை அமலாக்கத் துறை மே 14ம் தேதி கைது செய்தது. வாத்வான் சகோதரர்கள், எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி பிந்து கபூர், மகள்கள் ரோஷ்ணி, ரேகா ஆகியோர் மீது அமலாக்கத்துறை ஜூலை 15ம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

மார்ச் 7ம் தேதி சிபிஐ முதல் தகவலறிக்கை பதிவு செய்த பிறகு அமலாக்கத் துறை இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியது. சந்தேகத்துக்கிடமான கடன்களை வழங்கி பணத்தை சுருட்டியதாக அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.