முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்கவில்லை. சாமானியர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை நன்கு அறிமுகமான ஆயிரக்கணக்கானோர் கோவிட் வைரஸ் பாதிப்பால் உயிரை இழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால், திரையுலகில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் வேலை, வருமானமின்றி வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னட சினிமாவில் வேலையின்றி கஷ்டப்படும் தினசரி தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு ‘கே.ஜி.எஃப்’ புகழ் நடிகர் யாஷ் பணம் அனுப்ப முடிவு செய்துள்ளார்.

இந்த உதவி தொடர்பாக யாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நாடு முழுவதும் கணக்கிலடங்கா நபர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கோவிட் தோற்று உள்ளது. எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாம் இருக்கும் இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எனது சொந்தச் செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளேன்.

இந்தச் சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் இழப்புக்கு இது தீர்வாகாது என்பது எனக்குத் தெரியும். இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை”.

இவ்வாறு யாஷ் தெரிவித்துள்ளார்.