பழநி மலை முருகன் நவபாஷாண சிலை மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்

பழநி மலை முருகன் நவபாஷாண சிலை மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள் பற்றிய 15 அதிசய தகவல்கள்

ஆண்டி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார் பழனி மலை முருகன்.

இந்த கோயில் மட்டுமல்லாமல் கோயிலில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சிலையை அபிஷேகம் செய்து கொடுக்கப்படும் பிரசாதம் பல்வேறு உடல் பிணிகளைப் போக்கும் அருமருந்தாக உள்ளது.

1. தண்டாயுதபாணி விக்கிரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவற்றில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீருக்கும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிகப் புண்ணியம்.

2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது.

5. விக்கிரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்குச் சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்கிரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

8. அந்த சிலையைச் சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9. இந்த சிலையைச் செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

10. அம்பாள், முருகர், அகஸ்தியர் இவர்களுடைய உத்தரவுக்குப் பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையைச் செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளைப் பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தைப் போகர் சொற்படி தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தைக் குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

11. அகஸ்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளைக் காவடி போல் சுமந்து பொதிகை நோக்கிக் கொண்டு செல்ல, முருகர் அவனைத் தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்கச் செய்தார் என்று ஒரு புராணத் தகவல் உண்டு.

12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்குப் பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷாணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாகச் சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தைத் தரிசிக்க இயலாது.

15. பழனியில் இரண்டு மரகத லிங்கங்கள் உள்ளன. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.