சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் ரூ. 194.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக  தமிழ்நாடு அரசு  தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்  சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள் வாயிலாக சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு பெருகி வரும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களை இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக விற்பனை செய்ய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களான ஃபிளிப் கார்ட், அமேஷான் போன்ற தளங்களிலும் விற்பனையாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இணைய தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிடும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் மதி சந்தை விற்பனை இணைய தளம்  தொடங்கப்பட்டு உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக, அமேசான், பிளிப்கார்ட்  மீஷோ, இந்தியா மார்ட், ஜியோ மார்ட், பூம், ஜேஇஎம் போன்ற இ-வர்த்தக முன்னணி நிறுவனங்களின் இ-வர்த்தக தளங்களில் இதுவரை 4,235 பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மதி அனுபவ அங்காடி, சிறுதானிய உணவகங்கள், இயற்கை அங்காடி, மதி நடமாடும் விற்பனை வாகனம், அடுக்குமாடி விற்பனை சந்தை மற்றும் இ-வர்த்தக தளங்களின் வாயிலாக இதுவரை ரூ. 194.57 கோடி மதிப்பிலான சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கை காரணமா,  சுய உதவிக் குழுக்கள் இன்று பொருளாதார வளர்ச்சி பெற்று, வளமான வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர் என்றால் அது மிகையில்லை. பொதுமக்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்களின் தரமான தயாரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.