கொரோனா ’’தனிமை’’ மையத்தில் காதலனுடன் தங்கிய பெண் போலீஸ்…
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஒருவருக்கு  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருடன் பல நாட்கள் உடன் இருந்த மற்றொரு பெண் போலீசை அங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் தனிமைப் படுத்தினர்.
அந்த பெண் போலீஸ், தன் கணவனையும் உடன் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்று அவரது கணவனையும், பெண் போலீசுடன், சேர்த்துத் தனிமைப்படுத்தினர்.
விவகாரம் என்ன வென்றால், அந்த பெண் போலீஸ் திருமணமாகாதவர்.
அவருடன் தங்கி இருந்தவர் ஏற்கனவே திருமணமானவர்.
காதலன் என்ற போர்வையில் பெண் போலீசுடன் தங்க வைக்கப்பட்டவர் தபால் ஊழியராக பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.
அந்த நபரின் மனைவி,  3 நாட்களாகக் கணவனைக் காணாமல் தேடியபோது தான், ,தனிமை மையத்தில் தன் கணவன், பெண் போலீசுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆவேசமான அந்த பெண் ,தனது கணவனும், பெண் போலீசும் ’அடைக்கப்பட்டிருந்த’’ போலீஸ் பயிற்சி மையத்துக்குச் சென்றபோது, அவரை உள்ளே அனுமதிக்கக் காவலர்கள் மறுத்து விட்டனர்.
நாக்பூர் காவல்துறை ஆணையாளர் பூஷன்குமாரை நேரில் சந்தித்து அந்த பெண் புகார்  அளித்துள்ளார்.
பெண் போலீசிடம் இருந்து ,அந்த வாலிபரைப் பிரித்து வேறொரு இடத்தில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
நாக்பூர் போலீசில் பரபரப்பாக விவாதிக்கப்படும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.
-பா.பாரதி