சென்னை,

ள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த பிறக  பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுப் போம் என்று  ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தனர்.

அப்பதிவில், ‘உள்ளாட்சி தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியான உடன் பா.ஜ.க உடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டும், அரசியல் கட்சியினரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஏற்கனவே பதிவிட்டதில் பிழை உள்ளதாக கூறி வேறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவெடுபோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் ஏற்கனவே  பதிவிட்ட ட்வீட்டை நீக்கிவிட்டனர்.

இந்த ட்வீட் குறித்து  கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ். அணியின் எம்.பி மைத்ரேயன், ’பா.ஜ.க கூட்டணி குறித்து போடப்பட்ட ட்வீட்டுக்கு மறுப்பு தெரிவித்து மற்றொரு ட்வீட் பதிவிட்டு விட்டோம். யாரோ விவரம் தெரியாதவர்கள் அவ்வாறு பதிவிட்டுவிட்டார்கள்’ என்று  கூறியுள்ளார்.

பெரும்பாலான அரசியல் பிரமுகர்களின் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினிர்தான் பராமரித்து வருகின்றனர்.

இந்த பதிவுகள் அனைத்தும் அந்தந்த கட்சி தலைவர்களின் அனுமதி பெற்றே பதியப்பட்டு வருகிறது. அவர்களின் அனுமதி இல்லாமல் பதிவிடமாட்டார்கள்.

தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலில்,  பா.ஜ.க உடனான கூட்டணி குறித்து ஓ.பி.எஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அதிமுகவினரிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.