பா.ஜ.க.வில் குழப்பம் : ஐந்து நாட்களில் நான்கு முறை மந்திரி சபையை மாற்றிய எடியூரப்பா..

கர்நாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

கடந்த ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளில் இருந்து பா.ஜக.வில் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வந்ததால்,கடந்த 21 ஆம் தேதி 7 அமைச்சர்களைத் தனது மந்திரி சபையில் சேர்த்துக்கொண்டார்.

அவர்களுக்கு இலாகாக்களும் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

ஆனால், தங்களுக்கு அளிக்கப்பட்ட துறைகளைப் பல அமைச்சர்கள் விரும்பவில்லை.

இதனால் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட இலாகாக்களை அடிக்கடி மாற்றி வருகிறார், எடியூரப்பா.

கடந்த திங்கள்கிழமை அன்று மட்டும் இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை நான்கு மணி நேரத்தில் இரண்டு தடவை மாற்றினார்.

மந்திரிசபையை விஸ்தரித்த ஐந்து நாட்களில், இதுவரை நான்கு முறை மாற்றி அமைத்துள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மத்தியில், இது கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

‘’இப்படி மந்திரி சபையை மாற்றுவது மோசமான முன்னுதாரணம். அமைச்சர்கள் கொடுக்கும் அழுத்தத்துக்கு எடியூரப்பா பணிந்து போவது கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும்’’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-பா.பாரதி.