டில்லி,

நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும் என அவரது தாயார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் படித்துவந்த நஜீப் என்ற மாணவருக்கும் ஏபிவிபி என்ற இந்துத்துவ மாணவ அமைப்பினருக்கும் இடையில் கடந்த அக்டோபர் 14 ம் தேதி  கைகலப்பு ஏற்பட்டுள்ளது.  அதற்கு மறுநாளிலிருந்து நஜீபை காணவில்லை.

கடந்த 6 மாதங்களாக அவரை தேடிவருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சில பிரபலமான பத்திரிகை ஒன்று நஜீம், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று எழுதியதற்கு அவரது தாயார் பாத்திமா நவீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முஸ்லிம் என்றாலே தீவிரவாதிகள் என மக்கள் நினைக்கிறார்கள். ஊடகங்களும் அவ்வாறே சொல்கின்றன என வருத்தம் தெரிவித்தார்.

ஆதாரங்கள் இல்லாமல் அவ்வாறு செய்தி வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், தயவுசெய்து நஜீபை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய நஜீபின் சகோதரர் முஜீப், ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாக ஊடகங்கள் கூறி வருகின்றன. அவை மன்னிப்புக் கேட்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்லப்போவதாக எச்சரித்தார்.