லண்டன்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில் அரையிறுதிக்கான தகுதிப்போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோதுகிறது.

தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

ரேங்க்கிங்கில் உச்சத்தில் இருக்கும் அணிகளை, சாதாரண அணிகள் துவம்சம் செய்துவருகின்றன.

குறிப்பாக, உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவே, குரூப் சுற்று போட்டிகளுடன் வெளியேறிவிட்டது.

குரூப் – ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. • • •

குரூப் – பி பிரிவில் தற்போது வரை, எந்த அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இதில் இடம் பெற்றுள்ள நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி மற்றும் தோல்வியை அடைந்துள்ளன.

ஆகவே அடுத்து நடக்க உள்ள இரண்டு லீக் போட்டிகளும், காலிறுதிச் சுற்றாக மாறியுள்ளது.

இதனால் நாக் அவுட் ரீதியில் இந்தியா – தென் ஆப்ரிக்காவையும், பாகிஸ்தான் – இலங்கையையும் எதிர்கொள்ள இருக்கின்றன.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

இதற்கிடையே இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள், இன்று மோதுகின்றன.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்ற அதே லண்டன் ஓவல் மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடக்கிறது.

இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்குப் போட்டி துவங்குகிறது.

தொடரின் அரையிறுதிக்குச் செல்ல, இந்தப் போட்டியில் வெல்வது அவசியம் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும்.

தவிர டாஸும், அணிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கும் சக்தியாக இருக்கும்.

இலங்கையுடனான அதிர்ச்சித் தோல்வியால், இந்திய அணியில் இன்று மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதே நேரம், இன்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டாலும், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளது.