டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு அவரது மனைவி மற்றும் மகன் சந்தித்து பேசினார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 26ந்தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில்,  அவர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.

அப்போது உச்சநீதி மன்றம், ப.சிதம்பரத்தைத் பார்க்க அவரது குடும்பத்தினருக்கு தினசரி அரை மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என்றும், மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தற்போது, டில்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலக அறையில் சிறை வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், வழக்கு விசாரணை குறித்து தனது தந்தையிடம் ஆலோசனை நடத்தியதாகவும், தனது தந்தை உற்சாகத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது, அவரிடம் செய்தியாளர்கள், , “ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே?” என்று  கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு  பதில் அளித்த கார்த்தி, அது சரிதான். ஊழல் செய்த யாரும் தப்பிக்கக்கூடாது என்று கூறியதோடு, நானோ, எனது தந்தையோ ஊழல் செய்யாததால் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.