கட்டுரை: மருத்துவர் கே.எஸ். சரவணன்

“கொள்கை என்னன்னு கேட்டதும் அப்படியே தலை சுத்திருச்சு” என்று ரஜினி பதில் அளித்தது  .  ரொம்பவே பேமஸ் ஆகிவிட்டது.

பொதுவாக இந்த தலை சுற்றல் பலருக்கு வருவது உண்டு. இதைப்பற்றி மருத்துவம் என்ன சொல்கிறது.. இந்த தலைசுற்றலில் இருந்து தப்பிப்பது எப்படி?

பொதுவாக ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பெரும்பாலோர் நினைக்கிறார்கள், ஆனால் உண்மை அது அல்ல.

பல நேரங்களில் இந்தப் பிரச்சினைக்கு காதுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது. ஏனெனில்,  காது என்பது கேட்பதற்கு மட்டுமல்ல.. நமது உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் இதுவே!

காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் இருக்கின்றன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்லும்..  நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிரும்..  இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா’வை (Cochlea) அடையும்…

அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் இருக்கின்றன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் ஏற்படும். அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படும்.. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படும்…  பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று மூளை, வகைப்படுத்தி உணர வைக்கும்.

சமநிலை காவலன் காது

உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் இருக்கின்றது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) உள்ளன. லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டுவிதமாக உள்ளது.

மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் இருக்கின்றன.  நம் உடல் அசைவுக்கு ஏற்ப லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசையும்.  இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் ஏற்படும்.

இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்கிறது.  இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை அறிந்து கொள்ளும்.

அதற்கு ஏற்றமாதிரி,  நம் மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்தும்.  இந்தத் தொடர் செயல்பாடுகளில் ஏதேனும் குறை ஏற்பட்டால்,  காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.

தலைச்சுற்றல் என்பது என்ன தெரியுமா?

தலை கிறுகிறுக்கிறது (Dizziness) என்கிறோமே.. இது, மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலை உண்மையான தலைச்சுற்றல்.  காதுகளில் ஏற்படும் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் உணர்வோம். . அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் நமக்குத் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்று அழைக்கிறார்கள்.

இது  பொதுவாக முப்பது வயதை கடந்தவர்களுக்கு வரும். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பலருக்கு ஏற்படும்.

குறிப்பாக ஆண்களைவிட பெண்கள்தான் தலைச்சுற்றல் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள்.

தலைசுற்றல் வகைகள்

மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் ஏற்பட்டால்  குமட்டலும் தலைச்சுற்றலும் கொஞ்ச நேரம் இருக்கும். படுத்து ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்.

மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் ஏற்படும். இதுவும் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் தீர்ந்துவிடும்.

தீவிர வகை: இதில்,  தலைச்சுற்றல் அதிகமாக இருக்கும்.  வாந்தியும்  அதிகமாக வரும். . தலையை அசைத்தாலே இந்த இரண்டும் கூடும். மேலும்,  நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற பயத்தை நமக்கு ஏற்படுத்திவிடும்.

மினியர் நோய்

உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் ஏற்படுவது ஒரு வகை.  இதை Meniere’s disease என்பார்கள். தூங்கும்போதுகூட இப்படி ஏற்படலாம்.

காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும்.  படுத்துக்கொண்டே இருந்தால் பரவாயில்லை என்பது போல தோன்றும்.

இதன் பாதிப்பு இரண்டு நாட்களுக்கு மேல்கூட தொடரும்.

மருத்துவர் கே.எஸ். சரவணன்

ஒரு திசை தலைச்சுற்றல்

ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போதோ அல்லது   குனிந்து நிமிரும்போதோ ஏற்படும் தலை சுற்றலை ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysmal Positional Vertigo) என்று அழைப்பார்கள். இது ஏற்படும்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. ஆனால் தலை சுற்றுவதுபோன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

உட்செவி நரம்புப் பிரச்சினை

சளி பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதித்தால் நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் ஏற்படும். நடுக்காதில் சீழ் வைக்கும்போதோ, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போதோ கூட இந்தவகை  தலைச்சுற்றல் வரக்கூடும்.

வேறு  காரணங்கள்

காது பிரச்சினை காரணமாக ஏற்படுவதுதான் 80 சதவீத தலைசுற்றல். அதே நேரம் வேறு காரணங்களாலும் தலைச்சுற்றல் ஏற்படுவது உண்டு.  ஒற்றைத் தலைவலி, கழுத்து எலும்பில் பிரச்சினை, ரத்தச் சோகை, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், லோ சுகர்,  தைராய்டு பிரச்சினை, மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, இதயத்துடிப்புக் கோளாறுகள், மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு தலைசுற்றல் ஏற்படுவதும் உண்டு.

(இதற்கான பரிசோதனைகள் சிகிச்சை முறைகளை அடுத்த அத்தியத்தில பார்ப்போம். லிங்க் கீழே..)

 

தலைசுற்றல்: பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள்