சென்னை: பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா வருகை ரத்து ஏன்?  என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அவர் ஸ்டூடியோவுக்கு செல்லாமல் புறக்கணித்துள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

40ஆண்டுகளாக இசையமைத்து வந்த பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அலுவலகத்திற்கு இன்று இசையமைப்பாளர் நீதிமன்ற அனுமதியுடன் செல்ல இருந்த நிலையில், அவர்  அங்கு செல்வதை தவித்துள்ளார். இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் ரத்து செய்ததற்கான காரணமாக வெளியாகி உள்ளது.

இளையராஜாவின் மானசீக குருவான,  ரமண மகிரிஷினி படம் அவரது ஸ்டியோவில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அது சிதைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால்தான், இளையராஜா கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி, அங்கு செல்வதை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

40ஆண்டு காலமாக இசையமைத்து வந்த  இடத்தை காலி செய்வது தொடர்பாக இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டூடியோவுக்கும்  இடையேயான பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள, தானே எழுதிய இசை கோர்ப்புகள், தமக்கு சொந்தமான இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ள அனுமதிக்க வேண்டும், தியானம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, இளையராஜா, ஸ்டூடியோ நிர்வாகம் மீது தொடர்ந்த நஷ்டஈடு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என நிபந்தனை வைக்கப்பட்டது. அதையடுத்து,   ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் என்றும், அங்குள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் கோரினார். அதை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து,  தியானம் செய்யவும், உடைமைகளை எடுக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா அங்கு இருக்கலாம் என்றும் கூறியிருந்தது. அதன்படி,  இன்று காலை 9 மணிக்கு இளையராஜா, தனது வழக்கறிஞர் மற்றும் உதவியாளர்களுடன்  பிரசாத் ஸ்டுடியோ செல்ல தயானாரார்.

முன்னதாக,  பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜா   அலுவலகம் சென்ற வழக்கறிஞர், அங்கு  இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்த பத்ம விபூஷன் உள்பட உயரிய  விருதுகள், அவார்டுகள், ரமண மகிரிஷி உள்பட அரிய தலைவர்களுடன் அவர் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், இசைக்கருவிகள் போன்றவை கடுமையாக சேதப்படுத்தப்பட்டு குடோனில் போடப்பட்டிருப்தைப்போல இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, அவர் உடனே இளையராஜாவுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டதும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான, இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ செல்வதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.  குறிப்பாக  அவர் மானசீக குருவாக வழிபாட்டு வந்த பகவான் ரமண மகிரிஷியின் புகைப்படம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை அறிந்த இளையராஜா பெரும் துயர் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செயலாளர்  கடுமையான  மனஉளைச்சலில் இருப்பதால் வர இயலவில்லை என்று  கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில்,   இளையராஜா ஸ்டூடியோ செல்லும்போது, இருதரப்பினரும் ஒருவரோடு ஒருவா் பேசிக் கொள்ளக்கூடாது போன்ற நிபந்தனைகளை  கண்காணிக்க வழக்கறிஞா் வி.லட்சுமிநாராயணன் என்பவரை நீதிமன்றம் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.