லக்னோ
உத்திரப்பிரதேச விவசாய குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுமி விவசாயிகள் நிலை குறித்து தெளிவாக கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
நாடெங்கும் விவசாயிகள் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளதாக பலரும் கவலை தெர்வித்து வருகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் விவசாயிகள் கடும் துயரம் அடைந்து வருகின்றனர். உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணிடம் ஒரு ஊடகம் பேட்டி எடுத்துள்ளது. அதப் பேட்டியில் அவருடைய 14 வயது மகள் சுனைனா ராவத் இடை புகுந்து உண்மையை எடுத்துக் கூறி இருக்கிறார்.
அவருடைய பேட்டி விவரம் வருமாறு:
பேட்டியாளர் அந்த பெண்மணியிடம் ”உங்களுக்கு தொடர்ந்து பணி கிடைத்து வருகிறதா? என கேட்டதற்கு அந்த பெண்மணி ”இல்லை. அதிகம் பணி கிடைப்பதில்லை.” என பதில் அளிக்கிறார். அதற்கு சுனைனா இடை மறித்து, “வேலையே இல்லாத போது நாங்கள் எங்கு வேலை செய்வோம்? விளை நிலமே காலியாக உள்ளது. வழக்கமாக இங்கு தானியங்கள் நிறைந்து இருக்கும். பிறகு எங்கிருந்து எங்களுக்கு வேலை கிடைக்கும்?” என பதில் கேள்வி எழுப்புகிறார்.
பேட்டியாளர் வேலைகள் குறைந்துள்ளதா? என கேட்க சுனைனா, ”எல்லாமே குறைந்து விட்டது. நாங்கள் விதைக்கும் அளவைப் பொறுத்து தான் அறுவடை செய்ய முடியும். அதைத் தான் நாங்கள் உண்ணுகிறோம். முதலில் நெல்லை விதைத்தோம். அது வளர்ந்த பிறகு அதை அறுவடை செய்வோம். அதை வீட்டுக்கு எடுத்து வந்து அதிகம் உள்ளதை விற்பனை செய்வோம். தற்போது சாப்பிடும் அளவுக்கு கூட விளைச்சல் இல்லாத போதுஎதை விற்பது? எங்களை மிருகங்களாக்கினால் அது எங்களுக்கு நன்மை அளிக்கும்.” எனக் கூறுகிறார்.
பேட்டியாளர் நீ என்ன படிக்கிறாய்? என கேட்டதற்கு அவர், “நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் வீட்டில் எரிவாயு இணைப்பு உள்ளது. ஆனால் சிலிண்டர் காலியாக வீட்டினுள் உள்ளது. அதை நிரப்ப எங்களிடம் பணம் கிடையாது.” என பதில் அளிக்கிறார்.
பேட்டியாளர், “காலியாக உள்ளதா? அதை காண முடியுமா?” என கேட்கிறார். அந்தப் பென் தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று காலி சிலிண்டரை எடுத்து வந்து காட்டுகிறார். பேட்டியாளர் இது காலியா என கேட்டதற்கு, “ஆம் காலிதான் நீங்களே தூக்கி பாருங்கள்.” எனக் கூற அவர் தூக்கி பார்த்து, “ஆம் முழுவதுமாக காலியாக் உள்ளது. எப்படி காலியானது?” என வினவுகிறார்.
சிறுமி சுனைனா, “இங்கு யாருக்கும் வேலை இல்லாததால் சிலிண்டரும் காலியாக உள்ளது. வேலை இல்லை எனில் எப்படி எங்களுக்கு பணம் கிடைக்கும்?” என பதில் அளிக்கிறார். பேட்டியாளர், “சிலிண்டரை நிரப்ப எவ்வளவு செலவாகும்?” என வினவ அந்த சிறுமி, “இதற்கா? சுமார் 900 ரூபாய் ஆகும். வேலை இருந்த போது எனது தந்தை வழக்கமாக நிரப்பி வந்தார். தற்போது பணம் இல்லை” என பதில் அளிக்கிறார்.
"If we don't have enough to eat, what will we sell?" says Sunaina Rawat, a 14-year-old UP girl who is living every single election issue. Watch her story here: https://t.co/ps8hugw5Bz#DoctorSunaina #NDTVSpecialReport pic.twitter.com/s2IcMa1eFL
— NDTV (@ndtv) May 8, 2019
சிறுமி சுனைனாவின் இந்த வீடியோ பலராலும் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.