புதுடெல்லி:

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாம் யாத்திரை மேற்கொண்டதாக பிரதமர் மோடி பேசிய வீடியோ காட்சிகளை  அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, முரளி மனோகர் ஜோஷிக்கு ஆர்எஸ்எஸ் உறுதி அளித்துள்ளது.


மோடி ஏராளமாக பொய் பேசுவதாக புகார் எழும்போதெல்லாம், அது அப்படியே அடங்கிவிடும். ஆனால், மோடியின் புதிய பொய்யை பாஜகவின் முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி சரிபார்க்க ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது மோடியின் வீடியோ ஒன்று ‘சப்போர்ட் நமோ’ என்ற ஹேஸ்டேக்குடன் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதில் பேசும் மோடி, தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை மேற்கொண்டிருப்பதாகவும், குண்டு துளைக்காத கவசம் ஏதுமின்றி காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றியதாகவும் பேசினார்.

இந்த வீடியோவைப் பார்த்த பாஜக முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி அதிர்ச்சியடைந்தார்.

இந்த ரத யாத்திரையை மேற்கொண்டது நாம் தானே. இவர் எங்கிருந்து வந்தார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த வீடியோவை சரிபார்க்க ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுப்பினார்.

அப்போது பாஜக முழுநேர ஊழியராக இருந்த மோடி, கூட்டத்தோடு கூட்டமாக முரளி மனோகர் ஜோஷியின் யாத்திரையில் கலந்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் அந்த யாத்திரையை தானே தலைமை ஏற்று நடத்தியபோல் ‘பில்டப்’ கொடுத்து அந்த வீடியோவில் மோடி பேசியிருக்கிறார். அவர் கொடி ஏற்றவில்லை. தேசியக் கொடியை கையில் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஒரு இடத்தில் கூட முரளி மனோகர் ஜோசியின் பெயரை மோடி உச்சரிக்கவில்லை.
இதனையடுத்து, மோடியின் அந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத், மோடி பேசிய அந்த வீடியோக்கள் அகற்றப்படும் என்று ஜோஷியிடம் உறுதி அளித்தார்.