சிவகாசி: 800 மில்லியன் டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் சிவகாசி பட்டாசுத் தொழில் நலிந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

தமிழ்நாட்டிலிலுள்ள சிவகாசியில் மிகப் பெரிய அளவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈடுபடுத்தி சிரமங்களை ஏற்று தீபாவளிக்கு முன்பாகவே விதவிதமான பட்டாசுகளைத் தயாரித்து நாட்டின் பல பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் அனுப்புவது வழக்கம். ஆனால், இவ்வருடம் காற்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டங்கள் தொழிலை பெருமளவில் பாதித்து விட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளி என்பது, பரிசுகள் வழங்குவது, குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது, இனிப்புகள் தயாரித்து பகிர்ந்துன்பது என்று மட்டுமல்லாமல் பட்டாசு வெடித்து மகிழ்வதும் அடங்குகிறது. அதேவேளை, இப்படி பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை உலக அளவில் ஒப்பிடுகையில் காற்றில் பெருமளவு மாசு ஏற்படுத்தி விடுகிறது. ஆய்வுகளின்படி லட்சக்கணக்கான இந்தியர்கள் அற்பாயுசில் மரணம் அடைவதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக உச்ச நீதி மன்றம் ‘பசுமைப்பட்டாசு‘ களை மட்டும் தயாரிக்கவும் பயன்படுத்தவும் வேண்டுமென சட்டம் இயற்றியது. ஆனால், காவல்துறை இந்த சட்டத்தை அமுல் படுத்த முயற்சிகள் மேற்கொண்டாலும் அதனை பொருட்படுத்தாது பழைய வகைப் பட்டாசுகளையே தயாரிக்கவும் பயன்படுத்தவும் செய்கின்றனர் மக்கள்.

இந்த சட்டம் குறித்து குழப்பங்கள் நீடித்தாலும், சிவகாசியில் இதன் தாக்கத்தைக் காட்டும் அடையாளம் இருக்கவே செய்கின்றன. சிவகாசி, கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் 90/95 சதவீதமான தயாரிப்பைக் கொண்டிருந்தது. இது ஏறத்தாழ 800 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியதாகும். எனவே, இவ்வருடம் இதைவிட அதிக முன்னேற்றம் அங்கு எதிர்பார்க்கப் பட்டது.

சிவகாசி சுற்று வட்டாரத்தில் இருக்கும் 1000 க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்காலைகளில் ஒன்றான லிமா ஃபயர் ஒர்க்ஸ் இயக்குநர் மதன் கூறும்போது, “வழக்கமாக தீபாவளி முடிந்தவுடன் வாடிக்கையாளர்கள் வந்து அடுத்த தீபாவளிக்.கத் தேவையான பட்டாசுகளுக்கு முன் பணம் வழங்கிச் செல்வர். ஆனால், இந்த முறை அது நடக்கவில்லை“, என்றார். அவரது தொழிற்சாலை இம்முறை 60 சதவீத அளவே உற்பத்தி செய்ததாகக் கூறினார்.

சிவகாசியில் இந்தத் தொழிலானது உள்ளூர்வாசிகளுக்குப் பெருமளவு தொழில் வாய்பப்பைத் தரும் ஒன்றாகும். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தொழில் வாய்ப்பைத் தருகிறது. அதில் அதிகமானோர் கல்வியறிவு குறைந்த பெண்கள் ஆவர். தற்போது, அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

பட்டாசுத் தொழிற்சாலை ஊழியர், அரவிந்த் குமார் கூறும்போது, “நிறைய பேர் பண்ணையிலும், கட்டிடத் தொழிலிலும் தினக்கூலிகளாக தங்களது தொழிலை மாற்றிக் கொண்டு விட்டனர்“, என்றார்.

‘பசுமைப் பட்டாசுகள்‘ தயாரிக்க அரசு பயிற்சியும் பல்வேறு உதவிகளும் செய்தாலும் அதிக விலையின் காரணமாக விற்பனை மந்தமாகி விட்டது. பட்டாசுக் கடை வைத்திருப்பவரும், மொத்த வியாபாரியுமான குப்புசாமி கூறும்போது, விற்பனை 50 சத வீதம் குறைந்து விட்டதாகவும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆர்டர்கள் முற்றிலும் இல்லாது போய் விட்டதாகவும் கூறினார்.

அவர் மேலும கூறும்போது, “அதிகாரிகள், நாங்கள் காற்றை மாசு படுத்துவதாகக் கூறுகின்றனர். ஆனால், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நாங்கள் அந்த அளவுக்கு மாசுபடுத்துவதில்லை. அதுவுமில்லாமல், இந்த ஒருநாள் என்ன தொடரும் ஒரு வருடத்தையே பாதித்து விடுமா?“ என்றார்.

அவர் மேலும், “அரசு எங்களை நசுக்கக் கூடாது. 30 கிலோ மீட்டர் சுற்று வட்டாரமே இந்தத் தொழிலைத் தான் நம்பியுள்ளது. சிவகாசி என்பது இந்தத் தொழில் இல்லாமல் இருக்க முடியாது“, என்றார்.