சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை, திமுகவுக்கு ஆதரவு என திமுகவால் ராஜ்யசபா எம்பி. பதவி பெற்றுள்ள கமல்ஹாசன் அறிவிப்புக்கு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
உண்மையில் கமல் செய்திருப்பது தியாகம்தான் என கமல்ஹாசனின் முடிவு குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட போவதில்லை, திமுகவுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்த நிலையில் கமல் செய்திருப்பது தியாகம், எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதில் கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உணர்வுப்பூர்வமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார். இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம்.
“இது தியாகம் அல்ல, கடமை” என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்! பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியில்லை! மநீம தலைவர் கமல்ஹாசன் திடீர் அறிக்கை…
[youtube-feed feed=1]