கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிஆர்பி பாஸ்கரின் நினைவுக் குறிப்புகள் ‘மத்தியமம்’ என்ற மலையாள வார இதழில் தொடராக வெளிவந்தது.

இதில் சமீபத்தில் வந்த அத்தியாயத்தில் வாஜ்பாய் குறித்து இடம்பெற்றுள்ள குறிப்புகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையில் அணிசேரா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு நடைபெற்ற விருந்தில், வாஜ்பாய்-க்கு மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதாகவும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்ற மூத்த பத்திரிகையாளர் பிஆர்பி பாஸ்கர் கூறியுள்ளார்.

1977-79 ஜனதா கட்சி ஆட்சியின் போது வெளியுறவு அமைச்சராக இருந்த வாஜ்பாய் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனர் உறுப்பினராக எகிப்து இருந்தது. அந்த மாநாட்டில் இஸ்ரேலுடனான தனது முந்தைய ஒப்பந்தத்தில் இருந்து எகிப்து விலகியது குறித்து முக்கிய பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்த பிரச்சனையில் வாஜ்பாயினால் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்று பாஸ்கர் குறிப்பிடுகிறார்.

பின்னர், “இந்திய பத்திரிகையாளர்களுக்கு வாஜ்பாய் மதிய விருந்து அளித்தார்.

இதற்கு முன்பு வதோதராவில் ஜனசங்கத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நான் அவருடன் உணவருந்தினேன், அப்போது காயத்ரி கீர்த்தனைகளை பாடிய பின் உணவு பரிமாறப்பட்டது.

ஆனால் இலங்கையில் அன்றைய தினம் வாஜ்பாய் மற்றும் பிற பிரதிநிதிகள் உணவு பரிமாறப்படுவதற்கு முன்பு அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அங்குள்ள வழக்கப்படி உணவு உண்டோம்” என்று பிஆர்பி பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வாஜ்பாய் தன் முன்னால் இருந்த ஒரு உணவுவகையை சாப்பிட போனபோது, அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நிருபர் ஒருவர் “பண்டிட்ஜி, அது மாட்டிறைச்சி””என்று கூறினார்.

வாஜ்பாய் சிரித்துக்கொண்டே “இது இந்திய பசு மாடு அல்ல” என்று பதிலளித்தார்.