கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு டிசம்பர் வரை தொடர வேண்டும் என்றும் பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்காணிக்கவும், தவிர்க்கவும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சுகாதாரத் துறை வலியுறுத்தி வருகிறது.

அதே வேளையில், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அரசின் விலையேற்றம் குறித்து மக்கள் வாய்திறக்காமல் இருக்கவும், அதை திசை திருப்பவும் வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது பாஜக.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க திங்கள் முதல் வியாழன் வரை பொதுமக்களை அனுமதிப்பது என்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதனை கண்டித்து சென்னையில் நேற்று ஆர்பாட்டம் நடத்திய பாஜக வினர் வார இறுதி நாட்களிலும் கோயிலை திறக்க வேண்டும் என்று குரலெழுப்பினர்.

அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு மராட்டிய மன்னர் வீர சிவாஜி வந்து வழிபட்டதாக தெரிவித்தார், இதுபோன்று பெயர்பெற்ற ஸ்தலங்களில் அனைத்து நாட்களிலும் மக்களை அனுமதிக்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், 1967-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ஆங்கிலேயர்கள் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி செய்து கொண்டிருந்த போது மன்னர் சிவாஜி, காளிகாம்பாள் கோயிலுக்கு வந்ததாகவும் இதுகுறித்த கல்வெட்டு கோயிலில் உள்ளதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு 1947 ம் ஆண்டே வெளியேறிய நிலையில், 1967 ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி என்று கூறியதோடு, 3 ஏப்ரல் 1680 ல் மறைந்த மன்னர் சிவாஜி 1967 ம் ஆண்டு வந்து வழிபட்டதாக கூறியது அனைவரையும் திடுக்கிட வைத்தது.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை குறித்து விமர்சித்து வருபவர்கள், அவர் கூறிய கல்வெட்டு குறித்தும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

சென்னை காளிகாம்பாள் கோயிலில் உள்ள கல்வெட்டில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் கல்வெட்டு வைக்கும் பழக்கம் ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்டது என்ற நிலையில் ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட்ட வீர சிவாஜிக்கு அவர்கள் கல்வெட்டு வைத்திருப்பார்களா என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதோடு, பிரிட்டிஷ் ஆட்சியில் வைக்கப்பட்ட பெரும்பாலான கல்வெட்டுகளில் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்ற நிலையில், இந்த கல்வெட்டில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் இடம் பெற்றது எப்படி என்றும் கேட்கின்றனர்.

தவிர, இது 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் வைக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்திய காவல் பணியில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் கூட பாஜக-வில் சேர்ந்து விட்டால் தாங்கள் படித்ததை எல்லாம் மறந்து விட்டு மக்களை குழப்பும் வேலையில் ஈடுபட தயங்கமாட்டார்கள் என்று அண்ணாமலை விவகாரம் உணர்த்துவதாக கூறிவருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு சில கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் மத்திய அரசு தொடர்ந்து வருகிறது.

இதையே காரணம் காட்டி, ரயில்வே நடைமேடையில் வழியனுப்ப வரும் கூட்டத்தைக் குறைக்க பிளாட்பார்ம் டிக்கெட் விலையை ஐந்து மடங்கு உயர்த்தி ரூ. 50 க்கு விற்று வருகிறது ரயில்வே துறை.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதுடன் சாமானியர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்த கேள்வியை எழுப்பாமல் சந்தர்ப்பவாத அரசியல் செய்து வரும் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், காளிகாம்பாள் கோயில் கல்வெட்டு குறித்த அண்ணாமலையின் பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.