புதுடெல்லி: இந்திய தலைநகரம் எதிர்கொண்டுள்ள காற்று மாசுபாடு என்ற மிகப்பெரிய சிக்கலுக்கு தீர்வுகாணும் நடவடிக்கையுடன், கழிவுநீர் மேலாண்மை மற்றும் பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான ராகவ் சந்தா மற்றும் ஆடிஷி.

டெல்லி மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. தற்போதைய சூழலில், டெல்லியில் காற்று மாசுபாடு என்பது மிகவும் அபாயகரமான பிரச்சினையாக இருந்து வருகிறது.

எனவே, ஆம்ஆத்மி அரசின் மூன்றாவது காலகட்டத்தில், காற்று மாசுபாடு பிரச்சினைக்கு முறையாக தீர்வுகாணப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ‍செய்தி ஊடகத்திடம் பேசிய ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுமாகிய ராகவ் சந்தா மற்றும் ஆடிஷி ஆகியோர், கழிவுநீர் மேலாண்மை மற்றும் பொதுப்போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றனர்.

மேலும், கொள்கையும் அரசியலும் எப்படி ஒருங்கிணைந்து செல்ல வேண்டுமென ஆம்ஆத்மி நாட்டிற்கு காட்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.