கிங்ஸ்டன்

கிங்ஸ்டன் நகரில் நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் பேட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் நகரில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் டெஸ்ட் பந்தயம்  நடைபெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டாம் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இதில் ஹனுமா விஹாரி 111 ரன்னும், அணித்தலைவர் விராட்கோலி 76 ரன்னும், இஷாந்த் ஷர்மா 57 ரன்னும், மயங்க் அகர்வால் 55 ரன்னும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், கார்ன்வால் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்

முதல் இன்னிங்சில் மேற்கிந்திய அணி இரண்டாம் நாள் முடிவில்  7 விக்கட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த்து. மூன்றாம் நாளன்று மேற்கிந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் 117 ரன்கள் எடுத்த நிலையில் இழந்தது. முதல் இன்னிங்சில் ஹெட்மயர் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ‘ஹாட்ரிக்’ உள்பட 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தனது இரண்டாம் இன்னிங்சில் இந்திய அணி 54.4 ஓவர்களில் 4  விக்கட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்த ந்லையில் டிக்ளேர் செய்தது. இதில் ரஹானே 64 ரன்கள்மற்றும் விகாரி 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மேற்கிந்திய அணியின் கெமார் ரோச் 3 விக்கட்டுகளையும், ஜாசன் ஹோல்டர் 1 விக்கட்டையும் வீழ்த்தினார்கள்.

மேற்கிந்திய அணி 468 ரன்கள் வெற்றி இலக்குடன்  இரண்டாம் இன்னிங்சில் களம் இறங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய அணி 13 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேம்ப்பெல் 16 ரன்னிலும், பிராத்வெய்ட் 3 ரன்னிலும் அவுட் ஆன நிலையில் டேரன் பிராவோ 18 ரன்களுடனும், ஷமார் புரூக்ஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்

நேற்றைய நான்காம் நாள் தொடக்கத்தில் வெற்றி இலக்கு  423 ரன்களாக இருந்தது. தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணியின் டேரன் பிராவோ, புரூக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை எடுத்தனர். இந்த ஜோடியில் டேரன் பிராவோ 23 ரன்னில் இருக்கையில் காயம் காரணமாக வெளியேறிய பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய புரூக்ஸ் அரை சதத்தை கடந்த நிலையில் ரன் அவுட் ஆகி விக்கெட்டை இழந்தார். அதைத் தொடர்ந்து இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேற்கிந்திய அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாம் இன்னிங்சில் இந்திய அணியின் சார்பில்  முகமது சமி, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் இந்த தொடரை 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு  செய்த ஹனுமா விஹாரி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியின் வெற்றியின் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிபெற்ற அணித்தலைவரான தோனியின் (27 வெற்றி) முந்தைய சாதனையை, விராட் கோலி (28 வெற்றி) முறியடித்துள்ளார்.

அத்துடன் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தரவரிசை புள்ளி  பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் நியூசிலாந்து (60), இலங்கை (60), ஆஸ்திரேலியா (32), இங்கிலாந்து (32) ஆகிய அணிகள் உள்ளன.