கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் போலி டாக்டராக செயல்பட்ட மெக்கானிக் சிகிச்சை அளித்ததில் 10ம் வகுப்பு மாணவன் பலியானார்.

மேற்கு வங்கம் மாநிலம் பிர்பும் பகுதியை சேர்ந்தவர் அர்ஜித் தாஸ். 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து 3 தேர்வுகளை எழுதிவிட்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டது. இதனால் அவர் புர்த்வானில் உள்ள அன்னப்பூர்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அர்ஜித் தாஸை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். கொல்கத்தாவுக்கு அழைத்து செல்வதற்காக ஒரு ஆம்புலன்ஸை வாடகைக்கு பிடித்தனர். வாடகையாக ரூ. 8 ஆயிரம் ஆம்புலன்ஸூக்கும், டாக்டர் கட்டணமாக ரூ. 8 ஆயிரமும் செலுத்தப்பட்டது. டிரைவர், ஒரு டாக்டரும் ஆம்புலன்சில் பயணம் செய்துள்ளனர். எனினும் கொல்கத்தா மருத்துவனைமக்கு அர்ஜித் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளார்.

ஆம்புலன்சில் வந்தபோது மாணவனுக்கு டிரைவர் ஆக்சிஜன் சிலிண்டரை பொறுத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த டாக்டர் அமைதியாக இருந்துள்ளார். இது பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் மாணவர் இறந்த தகவல் அறிந்தவுடன் ஒட்டுமொத்த முறைகேடும் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆம்புலன்சில் இருந்த போலி டாக்டர் சேக் சர்பராஜூதீன் மெக்கானிக் என்பது தெரியவந்தது. அவருக்கு மருத்துவ பயிற்சி எதுவும் தெரியாது. இதையடுத்து டிரைவர் தாரா பாபு ஷா மற்றும் சேக் ஆகியோரை கைது செய்தனர். ஆம்புலன்ஸில் பெற்றோர் பயணம் செய்ய வேண்டாம் என்று இருவரும் வலியுறுத்தியதன் காரணம் தற்போது தான் தெரியவந்துள்ளது. இதன் பின்னார் இருந்து செயல்படும் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.