புதுடெல்லி: இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நாம் வாக்காளர்களை கவர தவறிவிட்டோம். ஆனாலும், 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலில் நாம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி பெறுவோம் என பேசியுள்ளார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.

நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் மோசமாக தோற்று, கடைசியில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தைக்கூட பெற முடியவில்லை ஆம் ஆத்மியால். மேலும், 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்த கொடுமையும் நடந்தேறியது.

எனவே, இந்த மோசமான தோல்விக்குப் பிறகு, கட்சித் தொண்டர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “நாடாளுமன்ற தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்பதை வாக்காளர்களுக்கு வலியுறுத்த தவறிவிட்டோம். நமக்கு எதிரான அலை என்று எதுவுமில்லை.

மக்கள் இதை மோடி – ராகுல் ஆகிய இருவருக்கும் இடையிலான தேர்தலாக பார்த்தார்கள். எனவே, அவர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தலில், நாம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் மாபெரும் வெற்றி பெறுவோம்” என்று பேசினார்.