டெகரான்

மெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால் போர் ஏற்படுவதை தவிர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் முறிந்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே விரோதம் மூண்டது. ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகள் விதித்தார். அது மட்டுமின்றி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஈரானுடன் கச்சா எண்ண்ய் வர்த்தகம் செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

அந்த எச்சரிக்கை கெடு இந்த மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு ஈரான் நாடு தன்னுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு தன்னை ஆதரிக்கா விட்டால் அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் செரிவூட்டலை அதிகரிப்பதாக கூறியது. அமெரிக்கா ஈரான் மீது மேலும் வர்த்தகத் தடைகளை விதித்து அந்நாட்டு கடற்கரை ஓரத்தில் தனது கடற்படையை குவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளலாம் என கூறப்பட்டது. இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் ஜரிஃப், “ஈரான் அமெரிக்காவுடனான போரை தவிர்க்க விரும்புவதால் இரு நாடுகளுக்கிடையே போர் மூள வாய்ப்பிலை. நாங்கள் போரை விரும்பவும் இல்லை, அத்துடன் எங்கள் நாட்டை அமெரிக்கா அழிக்கும் என்பதில் நம்பிக்கையும் இல்லை.

அமெரிக்கா எங்களை பயமுறுத்த கடற்படையை குவித்துள்ளது.  ஏற்கனவே பல முறை பல நாடுகளை அமெரிக்கா இவ்வாறு மிரட்டி உள்ளது. இது அமெரிக்காவின் அரசியல் விளையாட்டாகும்.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என கூறி உள்ளார். ஆனால்  சுற்றி உள்ளவர்கள் அவரை போர் நடத்த தூண்டி வருகிறார்கள். அவர்கள் ஈரானை விட அமெரிக்காவை வலுவான நாடாக மாற்ற எண்ணி உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.