மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னணி வகிக்கும் ஆளும் சுதந்திரா கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலியாவில் 151 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. பெரும்பான்மை பெற 77 எம்பிக்கள் தேவை.
ஏற்கெனவே 73 எம்பிக்களுடன் சுதந்திரா கூட்டணி கட்சி ஆட்சி இருந்தது. எதிர்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 72 இடங்கள் இருந்தன.

இந்த தேர்தலில் 1.65 கோடி பேர் வாக்களித்தனர். ஆளும் சுதந்திரா கூட்டணி கட்சியில் உட்பூசல் அதிகரித்ததால், மால்கம் டர்புனல் மாற்றப்பட்டு ஸ்காட் மோரிஸன் பிரதமராக இருந்தார்.

பருவ நிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கை என்பது இந்த தேர்தலில் முக்கிய பிரச்சாரமாக இருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அக்கட்சியின் தலைவர் பில் ஷார்டன் பிரதமராவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடியும் நிலையில், 72 இடங்களில் ஆளும் சுதந்திர கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மை பெற இன்னும் 5 தொகுதிகளே உள்ளன. அதேசமயம் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி 62 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இன்று இரவுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிரதமர் மோரிஸன் அளித்த பேட்டியில், எனக்கு எப்போதும் அதிசயங்கள் மீது நம்பிக்கை உண்டு. ஆஸ்திரேலிய மக்கள் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.