பெங்களூரு:

ரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  அமமுக பொதுச்செயலாளர் தினகரன்,  சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என எந்த கோரிக்கையும் எங்கள் தரப்பில் இருந்து வைக்கப்படவில்லை என்று கூறினார்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ10 கோடி அபராதம் வழங்கப் பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனை காலம் இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், நன்னடத்தை அடிப்படையில் விரைவில் விடுதலை செய்ய கர்நாடக சிறைத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை, அவரது உறவினரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,  சசிகலா வெளியே வர எங்கள் தரப்பில் இருந்து எந்தவித கோரிக்கை விடுக்கவில்லை என்று கூறியவர், தற்போதைய நிலையில்,  சசிகலா பரோலில் வருவதற்கு தற்போது எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும்,  பிரதமர் மோடி கேட்பது போல் அனைத்து மசோதாகளுக்கும் எதிர்க்கட்சிகள் செவி சாய்க்காது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போர்க் கால அடிப்படையில் தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.