புதுடெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் இந்தியாவில் 76.28% என்பதாக உள்ளதென்றாலும், இந்நோய் பரவலை எளிதான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்றுள்ளார் மத்திய சுகாதார அமைச்சர ஹர்ஷவர்தன்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், மத்திய அரசால் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை ஆன்லைன் முறையில் திறந்துவைத்த போது அவர் இதைப் பேசினார்.

அவர் மேலும் கூறியதாவது, “கொரோனாவால் குணமடைவோர் விகிதம் 76.28% என்பதாக அதிகரித்துள்ளது. மேலும், இறப்பு விகிதம் 1.82% என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. இதுதான் உலகளவில் குறைந்த மரண விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய 4 கோடி மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வியாழன்று மட்டும் 9 லட்சம் பேர் பரிசோதனைக்கு உள்ளாகியுள்ளனர். உலகின் இதர நாடுகளைவிட, நாம் கொரோனாவை எதிர்கொள்வதில் சிறப்பாக செயல்பட்டாலும், இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்றுள்ளார் அவர்.