சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர், பெரம்பூர், அண்ணாநகர் மற்றும் அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து நீர் நிலைகளும் வறண்டுவிட்டதாலும், அரசிடம் முன்னேற்பாடுகள் இல்லாததாலும், எதிர்பார்த்த நேரத்தில் பருவமழை பெய்யாததாலும், சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.

பல இடங்களில் தண்ணீர் கேட்டு போராட்டங்களும் நடைபெறுகின்றன. இதனால், ஜோலார்பேட்டையிலுள்ள மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து காவிரி நீரை ரயில் மூலம் கொண்டுவந்து சென்னைக்கு விநியோகம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.

நேற்று முன்தினம் ரயில்மூலம் கொண்டுவரப்பட்ட 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர், கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, அண்ணா நகர், பெரம்பூர், கொரட்டூர், அயனாவரம், திருவல்லிக்கேணி மற்றும் கொளத்தூர் ஆகியப் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஜோலார்பேட்டையிலிருந்து தொடர்ந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில் சென்னை நகரம் முழுவதும் தண்ணீர் டேங்கர்கள் 12000 டிரிப்கள் செல்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.