சென்னை:

 தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் நிலவி வரும் குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.  இதையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே கடந்த 17ந்தேதி அமைச்சர்கள் மற்றும்  உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட  நிலையில், முதல்வருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலம் பாதிப்பால், கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று தலைமைச் செயலகத்தில், குடிநீர் தட்டுப்பாடு சிக்கலை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள மாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், எதிர்காலத்தில் இது போன்ற சிக்கல் ஏற்படாமல் இருக்க நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம், ஏரி குளங்களை தூர்வாரும் பணியை தீவிரப்படுத்துவது, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்துஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர கேரள அரசு முன் வந்ததாகவும், அதை தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாகவும் நேற்று கேரள முதலமைச்சரின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

அதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கை கொடுத்தது. இருப்பினும் கேரளாவில் இருந்து ரயில் மூலம் தினமும் நீர் பெறுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.