சென்னை,

நீட் தேர்வு காரணமாக மாணவி தற்கொலை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

இதற்கிடையில் நடிகர் சூர்யாவின் கடிதம் குறித்து, பாஜ தலைவர் தமிழிசையின் ஆவேச பதிலுக்கு, கம்யூனிஸ்டு  முன்னாள் எம்எல்ஏ பாலபாலரதி பதில் அளித்துள்ளார்.

இதற்கிடையில், நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து,  நடிகர் சூர்யா, ‘நீட்’ தேர்வு மட்டுமே நமது கல்வி முறையின் ஒற்றைப் பிரச்சினை இல்லை. பல்வேறு குறைபாடுகள் கொண்ட நம் கல்விமுறையின் சமீபத்திய பலி அனிதா என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும், இன்னொரு அனிதா உருவாகக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ. தமிழிசை,  தற்போது கல்வி குறித்துக் கருத்துக் கூறும் நடிகர், ஒரு சில கோடிகளுக்காக நடித்துக் கொண்டிருந்த போது, நாங்கள் தெருக்கோடிகளில் நின்று மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தோம். அவர் நடிகர், நான் மருத்துவர், மருத்துவக் கல்வி குறித்து அவருக்கு விமரிசனம் செய்ய தகுதி இருக்கிறது, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழிசையின் கருத்துக்கு முன்னாள் எம்எல்ஏ பால பாரதி தனக்கே உரித்தான பாணியில் முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில்,

சூர்யா கோடிகளை வாங்கிக் கொண்டு
நடிப்பதால் கட்டுரையே எழுதக் 
கூடாதென சட்டம் ஏதாவது 
நிறைவேற்றிவீட்டீர்களா தமிழிசை?

அதோ நீட்டை எதிர்த்து ஆசிரியர்
பணி துறந்துள்ளாரே சபரிமாலா
அவருக்கென்ன பதில் சொல்வீர்கள்?

இது ஒன்றும் செல்லாத நோட்டல்ல.
செல்லாமல் போவதற்கு!

அனிதாவும் சபரிமாலாவும் வேறல்ல,
சூர்யாவும் சபரிமாலாவும் வேறல்ல!
இது தொடர்போராட்டம்!
சமூக நீதிக்கான போராட்டம்!

இப்படித்தான் இருக்கும்,
பரவாயில்லை தெருக்கோடியிலிருந்தாவது
கவனியுங்கள்!…

என்று பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நீட்டுக்கு ஆதரவாக பேசி வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி, தனது மகளுக்கு எப்படி எம்.பி.பி.எஸ் சீட் வாங்கினார் என்பது குறித்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.