மேற்குவங்க மாநிலத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவு துவங்கியது.

மேற்கு வங்க மாநிலத்துக்கு  இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என முன்னதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அம்மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நடைபெறுகிறது. 20 சுமார் 48 ஆயிரம் உள்ளாட்சி பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது.

இன்று பதிவான வாக்குகள் வரும் 17-ம் தேதி  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.  அடுத்த வருடம்  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் கருதப்படுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டன.  இதையடுத்து  தேர்தல் தேதியை மாற்றும்படி மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு வேட்புமனு தாக்கலிலும் சிக்கல் ஏற்பட்டு அது குறித்தும்  ஒரு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

அசாம், பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இருந்து துணை ராணுவப் படையினர் மேற்கு வங்கத்துக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.