சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்  வரும் 18, 19ந்தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், அதை  நவம்பர் 25, 26-ம் தேதிகளுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு  தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார்.

 தமிழக அரசால் வரும் நவம்பர் 18-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நவ. 18, 19-க்கு பதில் 25 மற்றும் 26 தேதிகளில் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வசதிக்காக நவ.13-ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில், அதற்கு பதில் நவ. 18-ம் தேதியை பணி நாளாக அறிவித்து உள்ளதால், வாக்காளர் சிறப்பு முகாம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வரும் 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக். 27-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் வசதியாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் நவ 4, 5 மற்றும் 18,19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, நவ 4,5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தமிழக அரசால் நவ.18-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு முகாம் தேதிகளை நவ.18,19-க்கு பதில், நவம்பர் 25 ,26 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றியமைத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு  அதில்  தெரிவித்துள்ளார்.