மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து, டைட்டில் ஸ்பான்சரான சீனாவின் ‘வீவோ’ நிறுவனம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பிசிசிஐ.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பாக, இந்தியாவில் எழுந்த சீன எதிர்ப்பு மனநிலையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சராக தொடரும் வீவோ நிறுவனத்தை கழற்றிவிட வேண்டுமென்ற குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், இந்த 2020ம் ஆண்டு மட்டும், டைட்டில் ஸ்பான்சர் என்ற அந்தஸ்தில் இருந்து சீன நிறுவனம் விலக்கி வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, அடுத்தாண்டு துவங்கி 2023 வரை, பழைய ஒப்பந்தப்படி ‘வீவோ’ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக தொடரும் என்றே தெரிகிறது.

மேலும், இந்தாண்டு விலகிக் கொள்வது என்ற முடிவை, சீன நிறுவனமே, தானே முன்வந்து மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வேறு டைட்டில் ஸ்பான்சரை உடனடியாக தேடும் பணிகள் துவங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.