சிட்னி: விராத் கோலியின் தலைமையில், பெங்களூரு அணியில் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச்.

ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி-20 அணியின் கேப்டனாக உள்ளவர் ஆரோன் ஃபின்ச். இவர், தற்போது விராத் கோலி கேப்டனாக உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியில், டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட வேறுபல முன்னணி வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

ஃபின்ச் கூறியுள்ளதாவது, “விராத் கோலிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உண்டு. ஆனால், அவருடன் இணைந்து, குறிப்பாக, அவரின் தலைமையில் ஆடவுள்ளது இதுதான் முதல்முறை. அதை எதிர்நோக்கி ஆர்வமாக இருக்கிறேன்.

மேலும், டிவில்லியர்ஸ், ஸ்டெயின் உள்ளிட்ட இதர தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவதும் சிறப்பானது. கோலிக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கி, அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்” என்றுள்ளார் அவர்.