இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்களுடன் விஜயகாந்த் தனது ஹோட்டல் அறையில் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் முன்னணி நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் மக்களின் பேரன்புக்கு உரியவராக வலம்வந்தவர் விஜயகாந்த்.

2005 ம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியைச் தொடங்கிய அவர் 2006 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு எதிராக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பல இடங்களில் சவாலை ஏற்படுத்தினார்.

அந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்ற போதும் மக்களிடையே தேமுதிக-வுக்கு இருந்த ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வெற்றிபெற்றதோடு தமிழகத்தின் எதிர்க்கட்சியாக திகழ்ந்தது.

போட்டியிட்ட இரண்டாவது தேர்தலிலேயே எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்துக்கு உயர்ந்த விஜயகாந்த் அகில இந்திய அளவில் பிரபலமான அரசியல்வாதியாக அறியப்பட்டார்.

2016 சட்டமன்ற தேர்தலின் போது விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கிய நேரத்தில் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் மற்றும் ஆங்கில ஊடகவியலாளர்களின் பார்வை விஜயகாந்த் பக்கம் திரும்பியது.

பிரணாய் ராய், ருச்சிர் சர்மா, சுமன் துபே, ஸ்வாமிநாதன் ஐயர், சுர்ஜித் பல்லா என ஏராளமான செய்தியாளர்கள் விஜயகாந்தின் கூட்டணி முடிவு குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் அவர்களுடன் விஜயகாந்த் தனது ஹோட்டல் அறையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.