பாட்னா: பீகார் சட்டசபையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் விஜய் குமார் சின்ஹா.

இன்றைய பீகார் சட்டசபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், சபாநாயகராக தேர்வானார் விஜய் குமார் சின்ஹா.

என்டிஏ சார்பாக போட்டியிட்ட இவருக்கு, மொத்தமாக 126 வாக்குகளும், ஆர்ஜேடி கூட்டணி சார்பாக போட்டியிட்ட அவாத் பிஹாரி செளத்ரிக்கு 114 வாக்குகளும் கிடைத்தன.

சட்டசபையில், நிதிஷ் குமார் சட்டமேலவை உறுப்பினராக இருப்பதை வைத்து எழுந்த பெரும் கூச்சல்-குழப்பத்தின் மத்தியில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

எதிர்க்கட்சி கூட்டணியானது, சபாநாயகர் தேர்தலில், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வ‍ேண்டுமென்று கோரிக்கை வைத்தது. ஆனால், அதை தற்காலிக சபாநாயகர் ஜிதன்ராம் மஞ்சி நிராகரித்தார்.