சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய பேச்சு சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் பொன்முடி பதவியை இழந்தார். மேலும், பொன்முடிக்கு எதிராக 140-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீஸில் அளிக்கப்பட்டன. அத்துடன் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷும், பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், “பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம் . இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம். இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களையும் முடித்து வைக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து புகார்தாரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர், “புகார்தாரர் களிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் புகார்கள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன” என்று விளக்கம் அளித்தார்.
அதற்கு நீதிபதி, “புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யட்டும். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கட்டும்” என்றார். தொடர்ந்து நீதிபதி, “இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது.
மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும்.
ஒருவர் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்குமானது. சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமானது அல்ல. ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா, இல்லையா? என்பது குறித்து விசாரிப்பது தான். அதன்பிறகு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்றார்.
வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது.
மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதி, “பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரமாக கருதப்படும்” என்றும் குறிப்பிட்டார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஆகஸ்டு 4ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டு புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். உடனே நீதிபதி, ‘புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து புகார்தாரர்களிடம் ஒப்புகை பெறப்பட்டதா?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், புகார்தாரர்கள் அனைவரிடமும் ஒப்புகை பெறப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து நீதிபதி, அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதையடுத்து, அன்றைய தினம் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு வழக்கை முடித்து வைப்பதாக கூறி ஆவணங்களை தாக்கல் செய்தது.
இதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, சைவம், வைணவம் மற்றும் பெண்களை தொடர்புபடுத்தி பொன்முடி பேசிய முழு வீடியோ தொகுப்பையும், அவர் மேற்கோள் காட்டி பேசியதாக கூறப்படும் 1972-ம் ஆண்டுக்கான ஆதாரத்தையும் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு தற்போத நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் செப்டம்பர் 3ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடி பேசிய பேச்சின் முழு வீடியோ தொகுப்பையும், அவர் மேற்கோள் காட்டி பேசியதாக கூறப்படும் 1972-ம் ஆண்டுக்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்தார்.
அதையடுத்து நீதிபதி, இந்த ஆவணங்களை பார்த்துவிட்டு வழக்கை விசாரிக்க விரும்புவதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.