டில்லி,

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு மூச்சுத்திணறல் காரணமாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் மூச்சுத்திணறல்  காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு ஆஞ்சியோகிராஃபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது,

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  இதன் காரணமாக அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு   வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இதய அடைப்பை நீக்கக்கூடிய வகையில் அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்று கூறி உள்ளனர்.