கோவை: கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளரான வேலூர் இப்ராஹிம் காவல்துறையினரால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார்.

 வேலூர் இப்ராஹிம் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  வேலூர் இப்ராஹிம்  அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. கோவை தொகுதியில், திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார் களமிறங்கி உள்ள நிலையில், பாஜக சார்பில், மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை நிறுத்தப்பட்டு உள்ளார். மேலும்,  அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் நிறுத்தப்பட்டு உள்ளார். அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில்,  பா.ஜ.க வேட்பாளரான  அண்ணாமலைக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அவருடன் 30-க்கும் மேற்பட்ட பாஜகவினரும் அப்பகுதியில் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும்,    தேர்தல் பறக்கும் படையினரும் இங்கு பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என வேலூர் இப்ராஹிமை தடுத்தனர். மேலும்,   உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது அறிவுறுத்தினர். இதனால் போலீசாருடன் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்து கிளம்பி செல்வதாக கூறிய வேலூர் இப்ராஹிமும் பாஜகவினரும்,  அருகாமையில் உள்ள கடைகளுக்கு சென்று சிறு சிறு பொருட்களை விலைக்கு வாங்கி, அதன்மூலம் அங்கிருந்த  பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். மேலும் சாரையோரங்களில் இருந்த  பூக்கடையில் ரோஜா பூ, டீ கடையில் பிஸ்கட், பழக்கடையில் திராட்சை ஆகியவற்றை வாங்கி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பொதுமக்களிடம் வியாபாரம் செய்வதை யாரும் தடுக்க முடியாது என்பதால், வேலூர் இப்ராஹிமின் நடவடிக்கைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்,. வேறு வழியின்றி, காவல்துறையினர்,  அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக வேலூர் இப்ராஹிம் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரை கைது செய்த போது பாஜகவினர் சிலர் போலீஸ் வாகனத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு வணிகர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வணிகர்களிடம், அரசியல் கட்சியினர் வியாபாரம் செய்வதை காவல்துறையினர் தடுப்பதாகவும், ஏற்கனவே வியாபாரத்துக்கு பணத்தை எடுத்துச்சென்றால், அதை கைப்பற்றி குற்றவாளிகளை போல காவல்துறையினர் நடத்துவதாகவும்  குற்றம் சாட்டி உள்ளனர்.