சென்னை:
நடிகர் தனுஷ் வெற்றி மாறன் கூட்டணியில் வெளியாகி உள்ள அசுரன் படம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அசுரன் படத்தின் கதைக்கருவான வெக்கை நாவலின் ஆசிரியர் பூமணி அசுரன் படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
சாகித்திய அகாடமி விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரான பூ.மாணிக்க வாசகம் என்ற பூமணி எழுதிய வெக்கை நாவல்தான் அசுரன் என்ற பெயரில் படமாகி உள்ளது.

தற்போது படத்தை பார்த்த பூமணி, படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், ‘அசுரன்’ படம் நன்றாக உள்ளது, வெற்றிமாறன் ரொம்ப பிரமாதமாகப் படமாக்கியுள்ளார் என்று பாராட்டி உள்ளார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் நடிப்பில் உருவான படம் அசுரன். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், அசுரன் படத்தின் கதைக்கருவான ‘வெக்கை’ நாவலின் ஆசிரியரை படத்தைக் காரண இயக்குனர் வெற்றிமாறன் அழைத்திருந்தார். அத்துடன், பூமணியின் கருத்து என்ன என்பதை அறியவும் ஆவலாக இருந்தார்.
இந்த நிலையில் படத்தை பார்த்த எழுத்தாளர் பூமணி, “படம் நன்றாக உள்ளது. வெற்றிமாறன் ரொம்ப பிரமாதமாகப் படமாக்கியுள்ளார். தற்போது திரைப்படத் துறையிலும், சின்னத்திரையிலும் கதைப் பஞ்சம் ரொம்பவே இருக்கிறது. நல்ல நாவல்களை எடுத்து படமாகப் பண்ண வேண்டிய கட்டாயம் இப்போது இருப்பதாக நினைக்கிறேன்” என்று பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
இது இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றிமாறன், தற்போது காமெடி நடிகர் சூரி நாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகளைத் தொடங்குவதில் தீவிரமாகி வருகிறார்.
பூமனி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]