சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நிர்வாகிகள் பட்டியல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி அவர்களால் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராக வாழப்பாடி இராம.சுகந்தன் நியமிக்கப்பட்டு உள்ளார். அதுபோல மறைந்த குமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தியின் ஒப்புதலின்படி அறிவித்து உள்ளார்.

தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்பரசு உள்ளிட்டோரின் மகன்களுக்கும் கட்சியில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில்   கே.எஸ்.அழகிரி, ராமசாமி, சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, செல்லகுமார், மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார் எம்.பி., விஷ்ணுபிரசாத், மாயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, ஜே.எம்.ஹாரூண் ரசீத், பீட்டர் அல்போன்ஸ், சசிகாந்த் செந்தில், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன் என 19 பேர் இம்பெற்றுள்ளனர்.

அதில், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், பொருளாளர்,  நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், தேர்தல் கமிட்டி உள்பட பல்வேறு கமிட்டிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர்களாக வாழப்பாடி இராம.சுகந்தன் உள்பட 32 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுச்செயலாளர்களாக அருள் அன்பரசு உள்பட 57 பேரும், பொருளாளராக ரூபி ஆர்.மனோகரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.