புதுடெல்லி:
செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்க உள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாட்டின் 8வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி நாளை செகந்திராபாத்-விசாகப்பட்டிணம் நகரங்களுக்கு இடையே காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைக்க உள்ளார். தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் விதத்தில் 700கி.மீ தொலைவைக் கடக்கும் வகையில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும். இந்த ரயில் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டிணத்துக்கு 8 மணிநேரத்தில் சென்றுவிடும்.

இந்த ரயில் விசாகப்பட்டிணம், ராஜமுந்திரி, விஜயவாடா ஆகிய நகரங்களிலும், தெலங்கானாவில், கம்மம், வாராங்கல், செகந்திராபாத் நகரங்களிலும் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 2.0 ,அதி வேகத்தில் செல்லக்கூடியது. மணிக்கு 160 கி.மீ தொலைவை எளிதாக எட்டிவிடும் திறன்மிக்கது. இதுவரை 7வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.