டில்லி

மிழக ஆளுநரைத் திரும்பப் பெறக் கோரும் 50 லட்சம் பேர் கையொப்பமிட்ட மனுக்களை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் வைகோ ஒப்படைத்தார். 

தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும், அதனோடு கூட்டணியில் உள்ள கட்சிகளின் தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.ம.தி.மு.க. சார்பில் இது தொடர்பாகக் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த நடவடிக்கை கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கியது  இந்த நடவடிக்கையில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு முதல் கையெழுத்தைப் போட்டார்.  தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 32 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 50 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு உள்ளது.

இவற்றை 60 அட்டைப்பெட்டிகளில் அடைத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வைகோ செய்தியாளர்களிடம்,

“தமிழக ஆளுநர் அரசியல் உள்நோக்கத்தோடும் தமிழ்நாடு அரசுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதால் அவரை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றிருக்கிறோம். 

குடியரசுத் தலைவரிடம் இதை நேரில் கொடுப்பதற்கு அனுமதி கேட்டபோது நேரம் இல்லை என்று சொல்லிவிட்டதால் அவர் அலுவலகத்தில் ஒப்படைத்தோம்ம். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ் மக்களின் கருத்துகளை தெரிந்து கொள்வதற்குக் கூடக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இடம் இல்லை என்பதை மக்களுக்குச் சொல்வோம். பாஜக அரசின் அழுத்தம் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்”

என்று கூறி உள்ளார்.