டில்லி

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக்  அப்துல்லாவை ஆஜர்படுத்த கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார்.

கடந்த மாதம் 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 விலக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.   அத்துடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.    இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வரும் 15 ஆம் தேதி அன்று மதிமுகவின் சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.  சென்னையில் நடக்கும் இந்த பிரமாண்டமான விழா மாநாட்டில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கலந்துக் கொள்வதாக ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளார்.   ஆனால் தற்போது ஃபரூக் அப்துல்லா குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலை உள்ளது.

இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தங்கள் கட்சியின் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் கலந்துக் கொள்ள ஒப்புக் கொண்டதால் அவரை கண்டு பிடித்துத் தருமாறு வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.