வாஷிங்டன்

மெரிக்க அரசு உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர் ராணுவ  உதவி அளிக்க போவதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தனது படைகளை அனுப்பித் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இருதரப்பிலும் இந்தப் போரில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.  இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நாடுகள் உக்ரைனுக்குப் பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராகப் போரிட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அரசு உக்ரைன் நாட்டுக்கு மேலும் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.