கீவ்: ரஷ்யாவுக்கு எதிரான போரில்  எங்களுடன் இணைந்து போரிட யாரும் தயாராக இல்லை என்று நள்ளிரவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உ உருக்கமாக கூறினார்.

உக்ரைன் மீது ரஷியா நேற்று (பிப்ரவரி 24) காலையில்  ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.  சரமாரியான ஏவுகணைகளைக்கொண்டு தாக்கியதில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பல கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து சரியான தகவல்கள் வெளியாக வில்லை. ஆனால், உக்ரைன் நாட்டு வான்வழிக் கட்டமைப்பு முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக  ரஷியா அறிவித்துள்ளது. ஆனால், உக்ரைன் ராணுவத்தினர் ரஷிய விமானங்களை வீழ்த்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று 2வது நாளாக போர் தொடர்கிறது. உக்ரைன்  தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் நேற்று நள்ளிரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,  ரஷியாவுக்கு எதிரான போரில் நாம் தனித்து விடப்பட்டுள்ளோம். ரஷ்யாவை எதிர்த்துப் போராட உக்ரைன் தனித்தே சென்றதாக கூறியவர்,  எங்களுடன் இணைந்து போராட யார் தயாராக இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியதுடன், நான் யாரையும் பார்க்கவில்லை” என்று கூறினார்.

எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம் என்று கூறியதுடன்,  ரஷியாவின் தாக்குதலுக்கு இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என  137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும்,  நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம். ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள் தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு.

இவ்வாறு அவர் பேசினார்.

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்குவோம் என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படை களமிறங்காது என்று கைவிரித்து விட்டார்.  உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகளை அனுப்பப்போவதில்லை என்றும்,  ஆனால், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

அதுபோல, நேட்டோ குழுமமும் உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பவில்லை.  உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது படைகளை  திரும்பப் பெற வேண்டும் என்று எச்சரித்ததோடு நிறுத்திக் கொண்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். நேட்டோவிடமும் அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பதை ரஷ்யா புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, ரஷியர் அதிபருடன் போரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த நாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையோடு இருப்பதாக கூறப்படுகிறத.

இந்த நிலையில்தான், உக்ரைன் அதிபர், தங்களுக்கு ஆதரவாக எந்தவொரு நாடும் வரவில்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.