வாஷிங்டன்

 கொரோனா சிகிச்சைக்கு கிலீட் நிறுவனம் தயாரித்துள்ள ரெம்டிசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றில் அமெரிக்கா மிகக் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை அமெரிக்காவில் 11.31 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   சுமார் 65750க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  பாதிக்கப்பட்டோரில் 1.61 லட்சம் பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.

இது அமெரிக்க அரசுக்கு மிகவும் கவலையை அளித்துள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் கிலீட் நிறுவனம் ரெமிடிசிவிர் என்னும் மருந்தைக் கண்டுபிடித்தது.  இதை சோதனை செய்த சீனா இது தோல்வி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டது.  இதை அமெரிக்காவும் சோதனை செய்தது.

அந்த சோதனையில் இந்த மருந்து வெற்றி பெற்றதாக அறிவித்த அமெரிக்க மருத்துவ நிபுணர் ஆண்டனி ஃபாசி சீனாவில் இந்த மருந்தைச் சரியாகச் சோதனை செய்யவில்லை என தெரிவித்தார்.    இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெமிடிசிவிர் மருந்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த மருந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளித்துச் சோதித்ததில் அவர்கள் விரைவில் குணமடைந்துள்ளதாகத் தெரிவித்த டிரம்ப் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிரவாகத் துறை இதற்கு அவசர அனுமதி அளித்துள்ளதையும் அறிவித்துள்ளார்.