டெல்லி: காலியிடங்கள் இல்லை கூறி, 2020ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார சேவை தேர்வை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2020ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நாட்காட்டியின் படி, யுபிஎஸ்சியானது இந்த ஆண்டு ஐஇஎஸ் மற்றும் ஐஎஸ்எஸ் ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட இருந்தது. விண்ணப்ப பணிகளும் இன்று முதல் தொடங்கப்படவிருந்தன.

அக்டோபர் 16 முதல் 3 நாட்கள் இந்த தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அந்த தேர்வு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஐ.எஸ்.எஸ் பதவிகளுக்கு, 47 காலியிடங்கள் உள்ளது என்றும் அதற்கான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு யுபிஎஸ்சியால் அறிவிக்கப்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கை 3030ல் இருந்து, 2018-19ம் ஆண்டில் 2,352 ஆக குறைந்துள்ளது. பின்னர் 2017-18 ஆம் ஆண்டில் 3,083 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, யுபிஎஸ்சியின் ஐஇஎஸ் ஐஎஸ்எஸ் பணிக்கான ஆட்சேர்ப்பு பற்றி அறிவிக்கப்பட்டது. மொத்தமாக, 32 ஐ.இ.எஸ் மற்றும் 33 இந்திய புள்ளிவிவர சேவையான ஐஎஸ்எஸ் பதவிகள் அறிவிக்கப்பட்டன. இந்த பணிகளுக்கு பொருளாதாரம் மற்றும் அது தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் முதுகலை பட்டம் பெற்றவர் பணியமர்த்தப்படுகின்றனர்.