Upper caste members pour kerosene in Dalits’ well in revenge in MP village

 

மகாராஷ்ட்ர மாநிலத்தில், தலித்துகள் பயன்படுத்தும் குடிநீர்க் கிணற்றில், மண்ணெண்ணெயை ஊற்றி, உயர் சாதியினர் தங்களது வன்மத்தைத் தீர்த்துக் கொண்டுள்ளனர். ஆகார் மல்வா மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில், இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சந்தர் மேக்வால் என்பவர் தனது மகள் மம்தாவின் திருமணத்தைச் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக பாண்டு வாத்தியம் முழங்க மணமக்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். இதையறிந்த அந்தக் கிராமத்தின் உயர்சாதியினர், ‘தலித்துகளின் திருமணத்தில் பாண்டு வாத்தியமா கூடாது’ என எச்சரித்துள்ளனர். அப்படி மீறிப் பயன்படுத்தினால், கிராமத்தை விட்டு தள்ளிவைக்க நேரிடும் எனவும் உயர்சாதியினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதைப் பொருட்படுத்தாத சந்தர் மேக்வால் திட்டமிட்டபடி தமது மகள் திருமணத்திற்கு  பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உயர்சாதியினர், தலித் மக்கள் மட்டுமே பயன்படுத்தும் குடிநீர்க்கிணற்றில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கலந்துள்ளனர். இதனால், அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி மற்றொரு இடத்தில் ஊற்றுத் தோண்டி, அந்தத் தண்ணீரை தலித் சமூகத்தினர் பயன்படுத்தி உள்ளனர். மண்ணெண்ணெய் கலந்த குடிநீரை மோட்டார் பம்ப் மூலம் கிணற்றில் இருந்து வெளியேற்றும் முயற்சியையும் அவர்கள் மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். விசாரணைக்குப் பின்னர், தலித் மக்கள் வசிக்கும் பகுதியில், இரண்டு போர்வெல் குழாய்களை அமைக்க ஆட்சியர் உத்தரவிட்டார். மண்ணெண்ணெய் கலந்த குடிநீர் முற்றிலும் அகற்றப்பட்டு, அதின் நன்னீர் நிரப்பப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னை இனி ஏற்படாது என்றும் அவர் தலித்மக்களிடம் உறுதியளித்துள்ளார். குடிநீர்க்கிணற்றில் மண்ணெண்ணெயைக் கலந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரவித்துள்ளார்.