லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக  நடைபெறுகிறது.  முதல்கட்ட தேர்தல் நேற்று (பிபரவரி 10ந்தேதி) 11 மாவட்டங்கள் அடங்கிய 58 தொகுதிகளில் நடைபெற்றது.  காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது.

இந்த நிலையில், அங்குள்ள கைரானா பகுதியில்  நம்பர் பிளேட் இல்லாத காரில் கைவிடப்பட்ட இவிஎம் (EVM)  கண்டெடுக்கப்பட்டது. ஷாம்லி-பானிபட் நெடுஞ்சாலை யில்  இந்த  கண்டுபிடிக்கப்பட்டது. இதை சமாஜ்வாதி கட்சியினர் பார்த்து காவல்துறைக்கு தகவல்கள் கொடுத்தனர். இந்த காரின் பின்பகுதியில்  கைரானா தொகுதி மண்டல மாஜிஸ்திரேட் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அங்கு வந்த தேர்தல் அலுவலர்கள் அதை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த இவிஎம் இயந்திரம், மாவட்ட ஆட்சியர் முன்  திறக்கப்பட்டது. அந்த வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது என்பது தெரிய வந்துள்ளது. அந்த  வாக்குப்பதிவு இயந்திரம் அந்த காருக்குள் வைத்தது யார், எப்படி அங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.