லக்னோ: ராகுல்காந்தி குடும்பம் குறித்து மிக மோசமான விமர்சனத்தை வைத்துள்ளார் கேவலமான விமர்சனங்களுக்குப் பெயர்போன உத்திரப்பிரதேச பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங்.

போஜ்பூரி நடிகையும், நாட்டிய மங்கையுமான சப்னா சவுத்ரி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பதையடுத்து, இப்படி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார் அந்த சட்டமன்ற உறுப்பினர்.

தனது மட்டமான விமர்சனத்தில் அவர் கூறியிருப்பதாவது, “முன்பு இத்தாலியில் சோனியாகாந்தி என்ன வேலை செய்துகொண்டிருந்தாரோ, அதைத்தான் இன்று இங்கு சப்னா செய்துகொண்டிருக்கிறார். எனவே, ராகுல்காந்தி சப்னாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

ராகுலின் தந்தை, ராகுலின் அன்னையை எந்தவிதத்தில் ஏற்றுக்கொண்டாரோ, அதேவிதத்தில், ராகுலும், சப்னாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். சப்னாவை ராகுல் திருமணம் செய்துகொண்டால், அவரின் வீட்டில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நல்ல சந்தோஷமான உறவு நீடிக்கும்.

ராகுல்காந்தி அரசியல்வாதிகளை நம்புவதை விட்டுவிட்டு, நடிகைகளையும் நாட்டியப் பெண்மணிகளையும் நம்பத் தொடங்கிவிட்டார் என நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றெல்லாம் கூறியுள்ளார்.

இவரின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்றுவருகிறது.

– மதுரை மாயாண்டி